வாஷிங்டன்,
அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 25 சதவீத வரி, கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், டிரம்ப் மேலும் 25 சதவீத வரி விதித்து, வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 4 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு இம்மாதம் 25-ந் தேதி இந்தியா வருவதாக இருந்தது.இந்நிலையில், வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்பிடம்,
‘‘இந்தியா மீது 50 சதவீத வரி விதித்து இருப்பதால், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டனர். அதற்கு டிரம்ப், ‘‘இல்லை. வரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது’’ என்றார்.