புதுடெல்லி,
8 அணிகள் இடையிலான 11-வது ஆசிய கோப்பை மகளிர் ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன் நடப்பு சாம்பியன் ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய மகளி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 23 வயது நடுகள வீராங்கனை சலிமா டெடி கேப்டனாக தொடருகிறார். சமீபத்தில் நடந்த புரோ லீக்கின் ஐரோப்பிய சுற்றில் இடம் பிடித்து இருந்த அனுபவம் வாய்ந்த சவிதா, சுஷிலா சானு ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த அணி அறிவிப்புக்கு பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆசிய கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியால் உற்சாகம் அடைகிறோம். அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் திறமையான வீராங்கனைகள் சரிசமமான விகிதத்தில் இடம் பெற நாங்கள் முயற்சித்துள்ளோம். ஒவ்வொரு ஆட்டமும் எங்களது பொறுமை, உடல் தகுதி, வியூகங்களை சோதிக்கும். வீராங்கனைகள் சூழ்நிலைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்படும் உத்வேகத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிய போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: பன்சாரி சோலங்கி, பிச்சுதேவி கரிபாம், பின்களம்: மனிஷா சவுகான், உதிதா, ஜோதி, சுமன் தேவி தோவ்டம், நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, நடுகளம்: நேஹா, வைஷ்ணவி விட்டல் பால்கே, சலிமா டெடி (கேப்டன்), ஷர்மிளா தேவி, லால்ரெம்சியாமி, சுனிலிதா டாப்போ, முன்களம்: நவ்னீத் கவுர், ருதஜா தாதாசோ பிசல், பியூட்டி டங்டங், மும்தாஜ் கான், தீபிகா, சங்கீதா குமாரி.