ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குரேஸ்: ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் குரேஸ் செக்டாரில் நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குரேஸ் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்

இதுகுறித்து சினார் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஊடுருவல் முயற்சி குறித்து ஜேகேபி வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், குரேஸ் செக்டரில் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. எச்சரிக்கையுடன் இருந்த துருப்புக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தின. இதன் விளைவாக பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 13 அன்று, ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் ராணுவம் ஒரு ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.