உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா டிரோன்களை கொண்டு கடுமையான தாக்குதல்

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனினும், போர்நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரியது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது நள்ளிரவில் 800-க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு ரஷியா மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. பல்வேறு வகையான 13 ஏவுகணைகளாலும் ரஷியா தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் விமான படைக்கான செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாத் செய்தியாளர்களிடம் இதனை உறுதி செய்துள்ளார்.

இதில், உக்ரைனின் 37 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. எனினும், 747 டிரோன்கள் மற்றும் 4 ஏவுகணைகளை உக்ரைன் படை மறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால், உடைந்த பாகங்கள் 8 இடங்களில் விழுந்துள்ளன.

போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. போர்நிறுத்தத்திற்கான மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் டிரம்ப் உடன் புதின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், உக்ரைன் மீது இரவில் பெரிய அளவிலான தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.