வாஷிங்டன்,
உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக ‘கூகுள்’ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இணைய உலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் ‘கூகுள்’ நிறுவனம், தற்போது செயற்கை நுண்ணறிவு துறையிலும் கோலோச்சி வருகிறது.
இதற்கிடையில், விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை ‘கூகுள்’ நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.95 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி) அபராதம் விதித்தது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் அபராதம் நியாயமற்றது. இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளை எனது நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுப்பேன்” என எச்சரித்துள்ளார்.