Fake Aadhaar card : தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், சில மோசடி பேர்வழிகள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி அனைத்தையும் போலியாக உருவாக்குகின்றனர். அதேபோல நமது ஆதார் அட்டைகளையும் போலியாக உருவாக்கி, அவற்றைக் கொண்டு பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போலி ஆதார் அட்டைகளை எளிதாகக் கண்டறியவும் நாம் சில வழிகளைப் பின்பற்றுவது அவசியம்.
Add Zee News as a Preferred Source
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஒரு மிக முக்கியமான அடையாள அட்டை. வங்கிச் சேவை முதல் அனைத்து அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. ஆனால், சமீபகாலமாகப் பலர் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். இது சில சமயங்களில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண, போலி ஆதார் அட்டைகளை எப்படி எளிதாகக் கண்டறிவது என்று இங்கே பார்க்கலாம்.
1. UIDAI இணையதளம் மூலம் சரிபார்த்தல்
* ஆதார் அட்டையைச் சரிபார்க்க, நீங்கள் முதலில் UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in க்குச் செல்ல வேண்டும்.
* இணையதளத்திற்குச் சென்றதும், “எனது ஆதார்” (My Aadhaar) பகுதிக்குச் சென்று, “ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்” (Verify Aadhaar Number) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்து, உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் திரையில் தோன்றும் “கேப்ட்சா குறியீடு” (Captcha Code) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
* நீங்கள் “சரிபார்க்கவும்” (Verify) பொத்தானை அழுத்தியவுடன், உங்கள் ஆதார் எண் செயலில் உள்ளதா அல்லது செயலற்ற நிலையில் உள்ளதா என்பது உடனடியாகத் தெரிந்துவிடும்.
* உங்கள் ஆதார் “செயலில்” (Active) என்று காண்பித்தால், அந்த அட்டை உண்மையானது மற்றும் செல்லுபடியாகும் என்று அர்த்தம்.
mAadhaar செயலி மூலம் சரிபார்த்தல்
* UIDAI ஆல் உருவாக்கப்பட்ட mAadhaar என்ற மொபைல் செயலி மூலம் சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன.
* ஆதார் எண்ணைச் சரிபார்த்தல்: இணையதளத்தில் சரிபார்ப்பது போலவே, இந்தச் செயலியிலும் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.
QR குறியீட்டை ஸ்கேன் செய்தல்: ஒவ்வொரு ஆதார் அட்டையிலும் ஒரு QR குறியீடு (QR Code) இருக்கும். mAadhaar செயலியில் உள்ள ஸ்கேனர் மூலம் இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்கள் ஆதார் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
My Aadhaar செயலியைப் எப்படி பயன்படுத்துவது?
* mAadhaar செயலி உங்கள் ஆதார் எண்ணை பாதுகாப்பாக நிர்வகிக்க உதவுகிறது.
* இந்தச் செயலியைப் பயன்படுத்தி, உங்கள் பயோமெட்ரிக்ஸ் (கைரேகை, கண் கருவிழி) மற்றும் ஆதார் எண்ணைப் பூட்டி வைக்கலாம் (lock). நீங்கள் பூட்டி வைத்தால், இந்த விவரங்களை பயன்படுத்தி வேறு யாரும் அங்கீகாரம் பெற முடியாது.
* உங்கள் ஆதார் எண் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவ்வப்போது சரிபார்க்க இந்தச் செயலி உதவியாக இருக்கும்.
புகார் அளிப்பது எப்படி?
நேரடியாகப் புகாரளித்தல்: அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது UIDAI-இன் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று உங்கள் சந்தேகத்தையும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவும்.
கட்டணமில்லா உதவி எண்: UIDAI-இன் உதவி எண்ணான 1947-ஐ அழைத்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
காவல்துறை புகார்: இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதால், உங்கள் அடையாளத் திருட்டு (Identity Theft) குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பது மிகவும் முக்கியம்.
About the Author
S.Karthikeyan