மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: மணிப்பூரில் பிரதமர் மோடி உரை

சுராசந்த்பூர்: “மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மணிப்பூரின் அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும்.”என்று அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2023-ல் நடந்த இனக்கலவரம், அம்மாநிலத்தின் குகி – மேத்தி சமூகத்தினரிடையே பிளவை அதிகரிக்கச் செய்தது. இதனால், அம்மாநிலத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நிலைமையை சரி செய்ய மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்று மணிப்பூருக்குச் சென்றார்.

இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்த இடங்களில் ஒன்றான சுராசந்த்பூருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சுராசந்த்பூர் முகாமில் வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிப்பூர் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன. மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் கொண்டுவர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது ரூ. 7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

மணிப்பூர் சர்வதேச எல்லையைக் கொண்ட ஒரு மாநிலம். போக்குவரத்து இங்க ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. மோசமான சாலைகள் காரணமாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன். 2014-க்குப் பிறகு மணிப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த நான் பணியாற்றினேன். மேலும், மணிப்பூரின் ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம். மணிப்பூர் வரும் காலங்களில், முழு வட கிழக்குக்கும் பிரகாசத்தை அதிகரிக்கும். மணிப்பூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மணிப்பூர் மலைகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான புதிய வசதிகளை வழங்கும்.

வளர்ச்சிக்கு அமைதி மிக மிக முக்கியம். பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும். அதன் மூலம், உங்கள் கனவுகளை நிறைவேற்ற, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுடன் இருக்கிறேன்; மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வீடற்றவர்களுக்கு 7,000 வீடுகள் கட்ட நாங்கள் உதவி செய்கிறோம்.

மணிப்பூரின் பணிபுரியும் பெண்களுக்காக நாங்கள் பெண்கள் விடுதியைக் கட்டி வருகிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மேம்பாட்டுக்காக ரூ. 5,00 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது பழங்குடி இளைஞர்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். மணிப்பூரின் கலாச்சாரம் பெண்களின் வலிமையை ஊக்குவிக்கிறது. மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு, மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து உதவும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.