சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, வட்டாட்சியர் விஜயகுமார் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். வட்டாட்சியர்அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மனுக்களை திருடிய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப்பாண்டியை பணிநீக்கம் செய்யவும், நில அளவைத் துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பணிபுரியும் உதவி வரைவாளர் முத்துக்குமரனை (42) போலீஸார் பிடித்து விசாரித்தனர். நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர், முறையான ஆதாரம் இல்லாமல் கைது செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், வைகை ஆற்றுப் பாலத்தில் முத்துக்குமரன் சென்று வந்தது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவானதாக போலீஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மனுக்கள் கொண்டு வந்ததற்கோ, ஆற்றில் வீசியதற்கோஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டுமென சங்கத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர். பின்னர், வைகை ஆற்றுப் பாலத்துக்குச் சென்று வந்ததற்கு முறையாக காரணம் கூறவில்லை என்று கூறி முத்துக்குமரனை நேற்று இரவு கைது செய்தனர்.