சுப்மன் கில் காயம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவாரா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி  மிகப்பெரிய வெற்றிடன் தொடங்கி உள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இன்று (செப்டம்பர் 14) துபாயில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டாவது லீக் ஆட்டத்தை ஆட உள்ளது. இப்போட்டி தான் ஆசிய கோப்பை தொடரிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும்.

Add Zee News as a Preferred Source

இந்த முக்கியமான மோதலுக்காக இந்திய வீரர்கள் கடந்த சில நாட்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அணியின் துணை கேப்டனும், அண்மையில் சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் சுப்மன் கில் பயிற்சியின் போது காயமடைந்தார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விரலில் ஏற்பட்ட காயம்  

நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தபோது சுப்மன் கில்லின் விரலில் பந்து பட்டதால் அவர் வலி காரணமாக துடித்ததாக தெரிகிறது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு வந்து முதலுதவி செய்து சிகிச்சை அளித்தார். அந்த நேரத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் கவலைக்கிடமாக ஓடி வந்து கில்லுடன் பேசினர்.  

அதேபோல் அவரது நண்பரான அபிஷேக் சர்மா வாட்டர் பாட்டிலை திறந்து கொடுத்து உதவி செய்தார். இது வீடியோவாக சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மீண்டும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்  

வலியால் துடித்த அவர் பயிற்சியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னம்பிக்கையுடன் வலைப்பயிற்சிக்கு திரும்பி வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு உற்சாகமான பேட்டிங் பயிற்சியினை தொடர்ந்தார். இதனால் அவரது காயம் படிந்தது பெரிய ஆபத்தல்ல என்றும், நிச்சயமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய சாம்பியன் மோதலில் களம் காண்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.  

ரசிகர்களின் நம்பிக்கை  

இந்திய அணி முதல் போட்டியில் சுப்மன் கில்லின் ஆட்டமிழக்காத சிறப்பான இன்னிங்சால் எளிதாக வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக ஃபார்மில் இருக்கும் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று (செப்டம்பர் 14) இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.  

கணிக்கப்பட்ட இரு அணிகளின் பிளேயிங் 11

இந்தியா அணி: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விகீ), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.

பாகிஸ்தான் அணி: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ் (விகீ), ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது.

 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.