வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை (செப்.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.17), செப்.18 (நாளை மறுதினம்) பெரும்பாலான இடங்களிலும், செப்.19-ம் தேதி ஒரு சில இடங்களிலும், செப்.20 முதல் செப்.22-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (செப்.17) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்.18-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திலும், செப்.19ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடு்ம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் நாளை (செப்.17) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலைவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், சைதாப்பேட்டையில் தலா 12 செ.மீ மழை, கண்ணகி நகர், வேலூரில் தலா 11 செ.மீ மழை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வேலூர் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை, சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், மணலி, டிஜிபி அலுவலகம், மணலி புதுநகரில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.