தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் குழு, இப்படத்தின் புரோமோஷனை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்ததை அடுத்து, கோவை மற்றும் மதுரையில் ப்ரீ ரிலீஸ் ரீவண்ட் நடைபெற்றது. இப்போது திருச்சியில் நடைபெற்றது.
இவ்விழாவில், ‘பரிதாபங்கள்’ பிரபலம் கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் தனுஷிடம் சில கேள்விகள் கேட்டனர். அதில், “கோயமுத்தூரில் பிரபல செஃப் ஒருவர் இருக்கார், அவரோட கதைதான் இந்தப் படம்னு சமூக வலைத்தளங்களில் பேசிக்கிறாங்க, அது உண்மையா சார்?” என்றனர்.
அதற்குப் பதிலளித்த தனுஷ், “அதெல்லாம் கிடையாது, இட்லி கடை திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதைதான். நான் சிறு வயதில் இருந்த ஊரில் வாழ்ந்தவர்களை வைத்து கற்பனையாக உருவாக்கிய கதைதான் இட்லி கடை” என்றார்.

சுதாகர், “இட்லி கடை ஆடியோ லாஞ்ச்சில் இட்லி வாங்க கூட காசு இல்லைனு சொன்னீங்க, அப்பா இயக்குநராக இருந்தும், உண்மையிலேயே அவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டார்.
அதற்கு தனுஷ், “1991-ல் அப்பா இயக்குநர் ஆனதுக்கு அப்புறமும்கூட குடும்ப கஷ்டம் இருந்தது. அப்பாவுக்கு நாங்க 4 பிள்ளைங்க, எங்கள வளர்க்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். அவர் கஷ்டப்பட்டத பார்த்து, நாங்க அவர்கிட்ட எந்தக் காசும் கேட்டு தொந்தரவு செய்யமாட்டோம்.
கிராமத்துல பூ எடுத்து, வயல் வேலை செஞ்சு காசு சேமிச்சு, எங்களுக்குத் தேவையான சின்ன விஷயத்துக்கூட கஷ்டப்பட்டுதான் வாங்குவோம். அப்படிதான் இட்லி வாங்கக்கூட காசு இல்லைனு சொன்னேன். 1994, 1995 ஆண்டுகளில் குடும்ப நிலம மாறிடுச்சு, நல்லாகிட்டோம். அதுவரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டோம்” என்று பேசியிருக்கிறார்.