53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது. உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்யா காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24 அன்று அவர் பதவியேற்க உள்ளார். 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யா காந்தின் பதவிக் காலத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள், குற்றவியல் சட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தனியுரிமை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அடுத்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரில் 1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி பிறந்தவர். இவர் 2004, ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018, அக்டோபரில் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019 மே 24-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.