பாட்னா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானும் காங்கிரஸும் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலையொட்டி அரா, நவாடா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மாநிலத்தின் வளர்ச்சி, உண்மையை அடிப்படையாக கொண்டது.
காட்டாட்சி கூட்டணி (ஆர்ஜேடி- காங்கிரஸ்) சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கை பொய்களை அடிப்படையாகக் கொண்டதாகும். தேர்தல் அறிக்கை மூலம் மக்களை முட்டாள் ஆக்க காட்டாட்சி கூட்டணி முயற்சி செய்கிறது. ஆனால் பிஹார் மக்கள் ஏமாற தயாராக இல்லை.
எங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். இந்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதன்பிறகு பிஹார் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல தேவையில்லை. ஜவுளி, சுற்றுலா, உற்பத்தி துறையின் மையமாக பிஹார் உருவாக்கப்படும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முப்படைகளுக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். தீவிரவாதிகள் தங்கள் வீடுகளில் பதுங்கி இருந்தாலும் அவர்களை இந்தியா வேட்டையாடி அழிக்கும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் மீது குண்டுமழை பொழியப்பட்டது. அப்போது காங்கிரஸை சேர்ந்த ராஜ குடும்பம் தூக்கத்தை இழந்து பரிதவித்தது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் மட்டுமல்ல, காங்கிரஸும் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
சீக்கியர் படுகொலை: கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை காங்கிரஸார் அரங்கேற்றினர். இதில் தொடர்புடையவர்களுக்கு காங்கிரஸ் தலைமை இன்றளவும் முக்கிய பதவிகளை அளித்து வருகிறது.
பிஹாரில் ஆர்ஜேடி ஆட்சிக் காலத்தில் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு காணப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி இருந்தது. ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்கவில்லை. அந்த ஆட்சி மீண்டும் வருவதை மக்கள் விரும்பவில்லை.
காட்டாட்சியின்போது பிஹாரில் சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதற்குகூட அஞ்சினர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய ஊழல் குடும்பமும் (ஆர்ஜேடி) பிஹாரின் மிகப்பெரிய ஊழல் குடும்பமும் (காங்கிரஸ்) ஒன்றிணைந்து பிஹார் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆர்ஜேடி கட்சியை சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட காங்கிரஸ் துளியும் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரு கட்சிகளிடையே தொடர்ந்து மேதல் நீடித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக மாறும்.
பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய அவர்கள் விரும்புகின்றனர். எனவே வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.