ஜாம்ஷெட்பூர்,
இந்திய குடிமக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது.
மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும், பிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. சக்ரதார்பூர் மண்டல ரெயில்வே மேலாளர் மற்றும் ஊழியர் நிர்வாக அமைப்பு, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தென்கிழக்கு ரெயில்வே மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.