சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு கிடையாது.
அந்தவகையில், 2026-ம் ஆண்டுக்கான ‘வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். இந்த இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீர தீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி ஆகும்.
இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தகுதியுடையோர் அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.