கொழும்பு,
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்., 30ம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 31 மீனவர்களையும் மீண்டும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 31 மீனவர்களும் விரைவில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.