கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி. அவ்வப்போது ஏதாவது கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், ‘‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை அழிக்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் பாஜக.வினருக்கு வழங்கி வருகிறார். கிரிமினல்களுக்கு ஆளுநர் மாளிகையில் அடைக்கலம் கொடுக்கிறார். அவற்றை எல்லாம் ஆளுநர் போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து ஆளுநர் போஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொறுப்பற்ற வகையிலும், எரிச்சலூட்டும் வகையிலும் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியிருக்கிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஆளுநர் மாளிகையில் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் இருக்கின்றன என்று ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் கூறுகிறார் என்றால், அவரது மாநிலத்தின் போலீஸார் மீது நம்பிக்கையில்லையா?
ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் இருக்கின்றனவா என்பதை பார்க்க, கல்யாண் பானர்ஜி, பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்காக காலை முதல் ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கிறது. ஏற்கெனவே சிலர் வந்து பார்த்து விட்டு சென்றனர். சிலர் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கல்யாண் பானர்ஜி எங்கே? ஆளுநர் மாளிகையை கொல்கத்தா போலீஸார் பாதுகாத்து வருகின்றனர். அப்படி இருக்கையில் இங்கு ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் எப்படி வரும்? கல்யாண் பானர்ஜி கூறியது குறித்து உடனடியாக தீவிர விசாரணை நடத்த வேண்டும். அவரது கருத்து ஆளுநரின் பாதுகாப்புக்கான அத்துமீறலாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. ஜகநாத் சர்கார் கூறும்போது, ‘‘கல்யாண் பானர்ஜியின் மனநலம் சமநிலையில் இல்லை. எம்.பி.யாக இருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்து தெரிவித்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
பாஜக மூத்த தலைவர் அக்னிமித்ரா பால் கூறும்போது, ‘‘ஆளுநர் மாளிகையில் வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் இருக்கின்றன என்று ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் கூறுகிறார் என்றால், அவர் முதல்வர் மம்தா பானர்ஜியைதான் குற்றம் சொல்வதாக அர்த்தம். ஏனெனில், ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு கொல்கத்தா போலீஸிடம் உள்ளது’’ என்றார்.