Shubman Gill Injury Latest Update: தென்னாப்பிரிக்கா அணி இந்தியா அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவருக்கு திடீரென கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டது. களத்திற்கு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தும் அவருக்கு வலி சரியாகவில்லை. பேட்டிங் தொடர்ந்து பிடிக்க முடியாத காரணத்தினால் களத்தை விட்டு வெளியேறினார்.
Shubman Gill: ஒருநாள் மற்றும் டி20 தொடரை தவறவிடும் சுப்மன் கில்
இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் ஐசியு-வில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது. பின்னர் இரண்டாவது டெஸ்ட்க்கு முன்னதாக இந்திய அணியுடன் கில் கெளகாத்தி நகருக்கு பயணித்திருந்தாலும் முன்னெச்சரிக்கையாக அவர் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். மேலும் அவர் எதிர்வரும் ஒருநாள் தொடரிலும் விளையாட மாட்டார் என கூறப்பட்டு வரும் நிலையில், ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பேசப்பட்டு வருகிறது.
Shubman Gill: சாதாரண கழுத்து வலி கிடையாது
இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி சாதாரணமானது கிடையாது என்றும் அவருக்கு நரம்பில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள மருத்துவக்குழு அறிக்கையின்படி, சுப்மன் கில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மட்டுமல்லாமல் டி20 தொடரையும் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், டிசம்பர் மாதம் இறுதி வரை அதாவது இந்த ஆண்டு முழுவதும் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
Shubman Gill: இரண்டு மாதங்கள் விளையாட முடியாது
சுப்மன் கில் தற்போது ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீள சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் தவகல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஏற்பட்டுள்ளது வெறும் கழுத்து வலி மட்டுமல்ல கழுத்து நரம்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சுப்மன் கில் இதில் இருந்து குணமடைய குறைந்தது 8 வாரங்களாவது ஆகும் என தெரிகிறது.
Shubman Gill: பிசிசிஐ ரிஸ்க் எடுக்காது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கில் முழுவதுமாக தவறவிட இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது., இதன் காரணமாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு களத்திற்கு கொண்டு வரை பிசிசிஐ விரும்பாது. அவர் முழுமையாக குணமடைந்து தனது பயிற்சியை தொடக்க தேவைப்படும் அவகாசத்தை பிசிசிஐ வழங்கும்.