ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட பகிஷா பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குல்திபன் டாப்னோ என்பவர் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் குல்திபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் குல்திபனின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்குமுன் தனது தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் குல்திபன் தான் காரணம் என சிறுமி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து , பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் குல்திபன் டாப்னோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்