சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ஈட்டப்படுகிற வருமானம் முக்கிய பங்காக உள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடமாக சொத்து வரி வசூல் மந்தமாக இருந்தது. இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளதால் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சொத்துவரி வசூலிப்பதில் தீவிரம் காட்டினர்.
இந்த ஆண்டு சொத்து வரி இலக்காக ரூ.750 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அவற்றில் நேற்று வரை ரூ.730 கோடி வசூலானது. சொத்து வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாளாகும்.
2022- 2023-ம் ஆண்டிற்கான இறுதி அரையாண்டு சொத்து வரி இன்றைக்குள் செலுத்தப்பட வேண்டும். நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைன் வழியாக சொத்துவரி செலுத்தலாம்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டிபாபு கூறியதாவது:-
நடப்பு அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது. நேற்று வரை ரூ.730 கோடி சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.715 கோடி சொத்து வரியாகவும், ரூ.4.21 கோடி தொழில் வரியாகவும் வந்துள்ளது. இன்று இரவுக்குள் வரி வசூல் ரூ.750 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துவரி செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுப்பது இல்லை. அதே நேரத்தில் புதிய அரையாண்டிற்கான (2022-2023) சொத்துவரி செலுத்துவதில் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏப்ரல் 1 முதல் 15-ந்தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
இதேபோல் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதற்கு இரவு 8 மணிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை பொதுமக்கள் வசூல் மையங்களில் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.