இரிடியம் மோசடி வழக்கில் கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்: ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு 

மதுரை: இரிடியம் மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்தில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

விருதுநகரைச் சேர்ந்தவர் ராம்பிரபு என்ற ராஜேந்திரன். இவரை ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராம்பிரபு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ராம் பிரபுவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, வழக்கின் புகார்தாரரான சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முகமது தமீம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ’இரிடியத்தை ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்துள்ளேன். அதற்காக ரூ.10 ஆயிரம் கோடி வரை வர வேண்டியதுள்ளது. அந்தப் பணத்தை பெற ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பரிவர்த்தனைக்காக ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் தந்தால் ஒரு கோடி ரூபாயாக திரும்ப தருவதாக கூறி என்னிடம் ராம்பிரபு ரூ.10 லட்சம் வாங்கினார்.

என்னைப் போல் 133 பேரிடம் பணம் வாங்கியுள்ளார். ராம்பிரபுவிடம் நடிகர் விக்னேஷ் ரூ.1.17 கோடி கொடுத்து ஏமாந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ராம் பிரபுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி கே.முரளிசங்கர் இன்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ராம்பிரபு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். ரூ.2 கோடி மதிப்பு சொத்து மதிப்புக்கு வங்கி உத்திரவாதம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.