உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர்

மலையாள திரை உலகில் கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது துணை நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தியது தான். இது தொடர்பாக விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் தான் நீதிமன்ற அறிவுறுத்தல்படி கேரளா திரும்பி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் ஜூலை மூன்றாம் தேதி வரை தினசரி அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

தற்போது விசாரணை முடிந்த நிலையில் தன்னுடைய நிலை குறித்து சோசியல் மீடியாவில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் விஜய்பாபு. அதில் அவர் கூறும்போது, “கடந்த 70 நாட்களாக என்னுடன் இருப்பதற்கும் என்னை உயிருடன் வைத்திருப்பதற்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மீடியா நண்பர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருந்தும் அதை வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருப்பதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பேசுவதை விட இனி எனது படங்கள் பேசும். எனது படங்கள் பற்றி நான் தனியாக பேசுகிறேன். இறுதியாக ஒன்று சொல்கிறேன்.. நொறுங்கிப் போன ஒரு மனிதன் மீண்டும் அவனாகவே எழுந்து நிற்பதை விட வலிமையான விஷயம் வேறு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார் விஜய்பாபு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.