Draupadi Murmu: 15வது குடியரசு தலைவராக நாளை பதவியேற்கிறார் திரெளபதி முர்மு

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, திரெளபதி முர்மு நாளை பதவி ஏற்க உள்ளார்.

இந்தியத் திருநாட்டின், 14வது குடியரசுத் தலைவரான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில முன்னாள் திரெளபதி முர்மு, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக, திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக, நாடாளுமன்றத்தில் உள்ள மத்திய வளாகத்தில், நாளை, திரெளபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். அவருக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சி நிரல்

காலை 9.25 – திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவன் சென்றடைவார் (புதிதாக நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கு ராஷ்டிரபதி பவனுக்கு வந்தவுடன் மரியாதை வழங்கப்படும்)

காலை 9.50 – திரௌபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ராஷ்டிரபதி பவனில் இருந்து பார்லிமென்ட் மாளிகைக்கு கான்வாய் மூலம் புறப்படுவார்கள்

10:03 – கான்வாய் பார்லிமென்ட் கேட் எண் 5ல் உள்ள பார்லிமென்ட் மாளிகையை அடையும்; திரெளபதி முர்மு, ராம்நாத் கோவிந்த் ஆகியோர், துணை ஜனாதிபதி, பிரதமருடன், மத்திய மண்டபத்திற்குச் செல்வர்.

10:10 – சென்ட்ரல் ஹாலில் தேசிய கீதம் இசைக்கப்படும்

10:15 – பதவியேற்பு

10:20 – புதிய ஜனாதிபதியின் உரை

10:45 – புதிய மற்றும் பதவி விலகும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு புறப்படுவர்

10:50 – ராஷ்டிரபதி பவனில் தலைமை தாங்கும் விழா

11:00 – ராஷ்டிரபதி பவனில் இருந்து வெளியேறும் ஜனாதிபதிக்கு பிரியாவிடை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.