லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார்.
இங்கிலாந்து ராணியாக கடந்த 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முடிசூடிக்கொண்ட இரண்டாம் எலிசபெத், கடந்த 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தவர். உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்று காலமானார்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னராகிறார். இந்நிலையில், அவர் முறைப்படி மன்னராவதற்கான இரண்டு நடைமுறைகளில் முதல் நடைமுறை நாளை நடைபெற இருக்கிறது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
அதன்படி, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸை முறைப்படி அறிவிப்பதற்கான குழு, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் அந்நாட்டு நேரப்படி நாளை காலை 10 மணிக்குக் கூடுகிறது. இக்குழு சார்லஸை இங்கிலாந்தின் மன்னராக முறைப்படி அறிவிக்க உள்ளது.
இதையடுத்து, இரண்டாவது நடைமுறையாக சார்லஸ் மன்னராக உறுதிமொழி வாசித்து பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும்.
இதனிடையே, ராணியைப் பார்ப்பதற்காக ஸ்காட்லாந்து சென்ற சார்லஸ் இன்று லண்டன் திரும்பினார். மனைவி கமிலாவுடன் தனி விமானத்தில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார்.