நாளைக்கு பௌர்ணமி: இதை மறக்காம செய்யுங்கள்- பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்!

நாளை அக்டோபர் 9ஆம் தேதி பௌர்ணமி நாளாக இருப்பதால் அன்று

செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர்

தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நான் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன்.

கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி நான் உங்கள் அனைவருக்கும் 20 அன்புக்கட்டளைகளை பிறப்பித்திருந்தேன். அதன்பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களிலும் இதை நான் உங்களுக்கு நினைவூட்டினேன். ஒரு கட்டத்தில் இந்த நாளில் தான் இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதைக் கூட தளர்த்தி அமாவாசை, பவுர்ணமி, ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் நடத்துங்கள் என்று கூறியிருந்தேன்.

கடந்த அமாவாசை, மாதத்தின் முதல் நாளில் பாட்டாளி சொந்தங்கள் செயல்வீரர் கூட்டங்களை நடத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல், நாளை முழு நிலவு (பவுர்ணமி) நாளில் கிராமக் கிளை கூட்டங்களை பாட்டாளி சொந்தங்கள் நடத்த வேண்டும்.

அதில் கிராம அளவில் கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளை தீர்மானித்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.