இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – ராமநாதபுரத்தில் சோகம்

ராமநாதபுரம் அருகே நேற்றிரவு நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றிரவு சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரும், சிக்கலில் இருந்து வாலிநோக்கம் சென்றஇரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிநோக்கத்தைச் சேர்ந்த வெற்றி வீரன் (30) இளையராஜா (19) முகம்மது ராஜா (18) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நியாயம் கேட்டு உடலை எடுக்க விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வாலிநோக்கம் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரில் வந்தவர்களை தேடிவருகின்றனர்.
இதேபோல கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் உப்பளம் அருகே கரூரில் இருந்து ராமேஸ்வரம் சென்று விட்டு ஏர்வாடிக்குச் சென்ற டூரிஸ்டர் வேனும் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கீழக்கரை அலவாகரை வாடியைச் சேர்ந்த ஜீவா (20) மற்றும் மணி (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரோசன் (18) ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
image
இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.