மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. அதன்படி, போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை செலுத்தாமல் பல வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதை தடுக்கவும், மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.
* ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
* செல் போன் சிக் கொண்டே பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
* ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
* அதி வேகமாக, அபாயகரமாக வாகனத்தை செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் 18 வயதிற்கு உட்பட்ட நபர் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை 1.41 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.