வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் திகதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மத்திய நிலையம்; தெரிவித்துள்ளது.
மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்தது.
கடந்த 10 ஆம் திகதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 2 ஆவது மழைப்பொழிவு ஆரம்பமாகியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை 20 ஆம் திகதி கனமழை, வட தமிழகத்தில் வரும் 21, 22 ஆம் திகதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மத்திய நிலையம்; தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மத்திய நிலையம்; மேலும் தெரிவித்துள்ளது.