மெகா ஊழலில் சிக்கிய எடப்பாடி; பின்னி எடுத்த புகழேந்தி!

அதிமுக தலைமைப் பதவிக்கான தகராறு உச்சத்தில் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் உள்ளனர்.

இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே வெட்டு.. குத்து மட்டும் தான் ஆகவில்லை. அந்தளவுக்கு நிலமை விபரீதமாகப்போய் உள்ளதால் அதிமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக்கொள்வது? யாரை விலக்கி வைப்பது? என புரியாமல் பெரிதும் குழம்பி தவிக்கின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி வெளியிட்டுள்ள தகவல் எடப்பாடி பழனிச்சாமியை கடும் அதிர்ச்சியில் உறையச் செய்யும் விதமாகவே உள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

அப்போது பெங்களூரு புகழேந்தி கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓ.பி.எஸ்க்கு பலர் ஆதரவளித்து வருவதை பார்க்கையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணித்துறை மூலமாக பாலங்கள் கட்டுவதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது.‌

மேலும் கிருஷ்ணகிரி, திருப்பூர், இராமநாதபுரம் உள்பட 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருக்கிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவித்த அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தேவையில்லை. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையே விசாரணை நடத்தும் என தெரிவித்தார்.

ஆனால் தற்போது வரை அவர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யாததை தமிழக மக்கள் மட்டுமின்றி திமுகவினரும் விரும்பவில்லை. எனவே விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.

ஓட்டுப் போடாத மக்களுக்கும் நான் தான் முதல்வர் என்று கூறும், நான் மதிக்கின்ற பெரிதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மன்னிப்புக் கடிதம் வழங்கி விட்டு கட்சியில் இணைந்து கொள்ளலாம் என ராஜன் செல்லப்பா கூறியதாக சொல்கிறீர்கள். சிறையில் கட்சி நடத்துபவர்கள் மற்றும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் தற்போது இருக்கும் சூழலில் அதிமுகவை மூன்றாம் மீட்பராக ஓபிஎஸ் மீட்டெடுப்பார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.