ராகிங்கை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு: ஐகோர்ட்டில் வேலூர் சிம்எம்சி நிர்வாகம் உறுதி!

ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தரப்பில், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை துவங்கி உள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் அளித்து கல்லூரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.