ராகுல் சொன்னது போல் நாங்கள் காங்கிரசின் சொத்துக்கள்; கெலாட், பைலட் கூட்டாக பேட்டி

புதுடெல்லி: ராகுல் காந்தி சொன்னது போல் நாங்கள் காங்கிரசின் சொத்துக்கள் என ராஜஸ்தான்  முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கு இடையே மோதல் நீடித்தது. இதனிடையே, முதல்வர் கெலாட், “ சச்சின் பைலட் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி தலைவராக இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். அவரைப் போன்று கட்சியை காட்டி கொடுத்த துரோகிகள் ஒருநாளும் முதல்வராக முடியாது,’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, “தன் மீது கெலாட் சேறு பூசுவதால் எந்த பயனும் இல்லை. இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தும் விதத்தில் தான் வளர்க்கப்படவில்லை,’’ என்று பைலட் பதிலளித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி அளித்த பேட்டியில், அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் காங்கிரசின் சொத்துக்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் கெலாட், எம்பி. சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, “மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வரும் 4ம் தேதி முதல், 12 நாட்களுக்கு ராஜஸ்தானில் யாத்திரை நடத்த உள்ளார். இங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படும்.  ராகுல் கூறியது போல் தாங்கள் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள்,’’ என்று தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.