ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திக்க உள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன் பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்டத் துறை அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டம் காலாவதி ஆனது. இதற்கிடையே, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்தன.
அதில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டு இருந்ததார். ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, நாளை காலை 11 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளார். ஆளுநரை சந்திக்க, அமைச்சர் ரகுபதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கொண்டு வரப்பட்டது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.