வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் PM2 மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய அந்த யானை பாப்பாத்தி என்ற பெண்மணியை தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்துக்குப் பிறகு யானை பிடிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி யானையை பிடிப்பதற்கான பணியை வனத்துறையினர் தொடங்கினர். அப்போது, அந்த யானை கேரள மாநில எல்லையோரத்திற்குச் சென்றது. மீண்டும் அந்த PM2 மக்னா யானை தேவாலா பகுதிக்கு வரும் வரை வனத்துறையினர் காத்திருந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் அந்த யானை தேவாலா பகுதிக்கு வந்தது.

இதனையடுத்து அதனைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் புளியம்பாறை அடுத்துள்ள கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமத்தை ஒட்டி யானை இடம்பெயர்ந்தது. யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யானை மலை சரிவில் இருந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் மூலம் எளிதில் பிடித்து லாரியில் ஏற்ற வசதியான இடத்திற்கு வரும்வரை காத்திருந்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே புளியம்பாறை, கோழிக்கொல்லி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.