கும்பகோணம் | சர்க்கரை ஆலை நிர்வாகிகளுக்கு கண்டனம்: 2-ம் நாளாக விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன் சர்க்கரை ஆலை நிர்வாகிகளை கண்டித்து, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 2-ம் நாளாக எலிக் கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கச்செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டி,.ரவீந்திரன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், பி.செந்தில்குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத்தலைவர் பி.அய்யாக்கண்ணு, காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் இரா.முருகன் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை தனக்காக முறைகேடாக விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.300 கோடி வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

விவசாயிகளின் கரும்புக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர்க்கடன் தொகை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும், மத்திய – மாநில அரசுகள் அறிவித்த கரும்பு மற்றும் லாபத்திற்கான முழுத்தொகை மற்றும் வெட்டுக்கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை தொடர்பான பேச்சு வார்த்தையை, விவசாயிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்த வேண்டும், மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இந்த ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் நாளாக எலிக் கறி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.