நெல்லை மாவட்ட எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு – என்னக் காரணம்?

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருமுறை அவகாசம் வழங்கியப் பிறகும் ஆணையத்தின் நோட்டீஸ் மீது திருநெல்வேலி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்யாததால், ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையைப் பெற்றப் பின்னரும், திருநெல்வேலி எஸ்.பி. ப.சரவணன் ஆஜராகாத நிலையில், இறுதி வாய்ப்பாக நவம்பர் 30-ல் ஆஜராக வேண்டும் எனவும், நோட்டீசை அலட்சியப்படுத்தியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என காரணம் கூறவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
image
அதன்படி நவம்பர் 30 ஆம் தேதி ஆணையம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தபோது, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆஜராகாமல், அவருக்குப் பதிலாக கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் என்பவரை ஆஜராக அனுப்பி உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஆணையத்தின் நோட்டீஸ்கள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், ஆணையத்தில் நேரில் ஆஜராவது தகுதிக்கு குறைவானது என்றும் எஸ்.பி. கருத்துவதாகவே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படுத்தும்படி தென் மாண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டு, சரவணன் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.