புலன் விசாரணையை துவக்கிய சிபிசிஐடி கொடநாடு கொலை வழக்கு ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி: நீலகிரி  மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை  எஸ்டேட் மற்றும் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த  10 பேர் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உட்பட இதுவரை 320 பேரிடம்  விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஊட்டியில்  உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான்,  கனகராஜ் ஆஜராகினார். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள்  அண்ணாதுரை, சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான்  வாதிடுகையில், ‘‘கொடநாடு கொலை வழக்கில் இதுவரை 320 பேரிடம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் புலன் விசாரணையை துவக்கி உள்ளனர். 700  தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே,  காலம் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றார். இதை  ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன், இவ்வழக்கின் விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு  ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.