சென்னையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் (26). இவர் இன்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்ற போது தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றுக் கொண்டு வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஏஞ்சலின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி ஏஞ்சலின் கீழே விழுந்ததால் அவர் தலையில் இருந்த ஹெல்மெட் தனியாக கழன்று ஓடியுள்ளது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் அடையவே சம்பவ இடத்திலேயே ஏஞ்சலின் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஏஞ்சலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த விசாரணையில் ஏஞ்சலின் ஹெல்மெட்டை சரியாக அணியவில்லை என்பதால் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புடனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநர் சரத்குமார் (29) என்பவரை கைது செய்தனர்.