விருதுநகரில், கடன் தொல்லை காரணமாக கணவன் – மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் எஸ்.வி.பி.என்.எஸ் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(41). இவருடைய மனைவி அருணா மகேசுவரி(37). இந்தத் தம்பதிக்கு அர்ச்சனா ஸ்ரீ(17), மேகாஸ்ரீ (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். கார்த்திக் ராஜா அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களாக கார்த்திக் ராஜா கடன் பிரச்சினை காரணமாக விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு 2 மகள்களும் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு தூங்கச் சென்றனர். பின்னர் அவர்கள் இன்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. 2 பேரும் பலமுறை கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கார்த்திக் ராஜாவும் அவருடைய மனைவியும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த அறையை போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் பிரச்சினை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.