தமிழகத்தில் 8ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அதன் காரணமாக வட தமிழகத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள முக்கிட்டா தகவலில், தெற்கு அந்தமான் கடலில் இன்று ஏற்படும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (5ஆம் தேதி) தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் 7ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
தொடர்ந்து வரும் 8ஆம் தேதி வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வரும் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக வரும் 8ஆம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.