Exit Polls: பாஜகவிடம் இருந்து டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் பதிவான வாக்குகள், வரும் 7 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், பாஜக வசம் இருக்கும் டெல்லி மாநகராட்சியை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

‘இந்தியா டுடே’ வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 149 முதல் 171 இடங்களும், பாஜக 69 முதல் 91 இடங்களும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களும், மற்றவை 5 முதல் 7 7 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஆம் ஆத்மி கட்சி 43 சதவீத ஓட்டுகளையும், பாஜக 35 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 10 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதே போல், என்டிடிவி – டைம்ஸ் நவ் உள்ளிட்டவை நடத்திய கருத்துக் கணிப்புகளில், டெல்லி மாநகராட்சித் தேர்தலில், ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்திய பாஜகவிடம் இருந்து இந்த முறை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.