கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதிகள்..!! இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கடந்த 2013 ஆம் ஆண்டு பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையான ராஜா முகமது மற்றும் மனோகரன் ஆகியோர் இழப்பீடு கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகேசன் கடந்த 19/03/2013 அன்று வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து எங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் வழக்கின் உண்மையான குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பில்லா மாலிக், முகமது இஸ்மாயில் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு நீதிமன்றம் வாயிலாக எங்களை விடுவித்தனர். பாஜக பிரமுகர் கொலை வழக்கில் எங்களை சிறையில் அடைத்ததால் அவமானம் தாங்காமல் சொந்த ஊரிலிருந்து வேறு இடத்திற்கு குடும்பத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணமான காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு எங்களுக்கு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றதால் துன்பங்களுக்கு ஆளான மனுதாரர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரர் ராஜா முகமதுவிற்கு 10 லட்சம் ரூபாயும், மற்றொரு மனுதாரர் மனோகரனுக்கு 8 லட்சம் ரூபாயும் இழப்பீடாக 16 வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். இந்த தொகையை தற்போதைய தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரியும் ரத்தினகுமாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.