12 ஆயிரம் பேரின் வாழ்வாதார பிரச்சனை..!! தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த விஜயகாந்த்..!!

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற பாடத்திட்டங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில் கடந்த 10 ஆண்டுகளில் 4000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு தற்பொழுது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.10,000 தொகுப்பூதியத்தோடு பணிபுரிந்து வருகின்றனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பகுதிநேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும், சம்பள உயர்வும் செய்யவில்லை. 

அதேபோன்று பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை பகுதி நேர ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது. எனவே 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்பதால் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என தனது அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.