சாதி மற்றும் மொழியை பயன்படுத்தி பிரிவினை; ராகுல் காந்தி சாடல்.!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும்,
காங்கிரஸ்
கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை கடந்து, தற்போது ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.

ராகுல் காந்தியின் யாத்திரையில் பொதுமக்கள், சினிமா கலைஞர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஜாதிகள் மற்றும் மொழிகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால், நாட்டின் பொது அமைதி சூழல் சீர்குலைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய அரசை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பஞ்சாப் ஃபதேகர் சாஹிப்பில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார். “அவர்கள் ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொரு சாதியையும், ஒரு மொழியை இன்னொருவருக்கு எதிராகவும் நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பொது அமைதி சூழலை கெடுத்துவிட்டனர்.

வெறுப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடுவதையும், அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் பரப்புவதையும் இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசத்திற்கு அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்ற வித்தியாசமான பாதையைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதுவே யாத்திரையைத் தொடங்க எங்களைத் தூண்டியது. அடுத்த 10 நாட்களில் நாங்கள் உங்களுடன் இருப்போம், உங்களுடன் உரையாடுவோம்’’ என்று கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் குருத்வாரா ஃபதேகர் சாஹிப்புக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

அதேபோல் ஜனவரி 19 அன்று இறுதி மாநிலமான ஜம்மு காஷ்மீரை அடையும் முன், எட்டு நாட்களுக்குள் இந்த யாத்திரை பஞ்சாபின் பல பகுதிகளை கடந்து செல்லும்.

கடும் குளிர் மற்றும் கடும் மூடுபனியை எதிர்த்து கட்சி ஆதரவாளர்களும், உள்ளூர் மக்களும் திரளாக திரண்டு, ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் செவ்வாயன்று அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோயில்) வழிபாடு செய்து பஞ்சாபுக்குள் நுழைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.