லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை 47 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வெடித்த வன்முறையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீதான இந்தத் தாக்குதலை இன அழிப்பு என்று மனித உரிமை ஆர்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அதனை கட்டுக்குள் கொண்டு வர மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.