விசாகப்பட்டினம்: செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று பொங்கல் பண்டிகையையொட்டி காணொலி காட்சியின் வழியாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா கவர்ன தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்றனா்.
இந்த சேவை, இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா பிரமாண்டமான பரிசைப் பெறுகின்றன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு வகையில், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியத்தை இணைக்கும். இன்று இராணுவ தினம். ஒவ்வொரு இந்தியனும் ராணுவத்தால் பெருமை கொள்கிறான். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் எல்லைகளில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், எல்லாவற்றிலும் சிறந்தது. இந்தியாவின் அடையாளமாகும். அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்கும். காலனித்துவ மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து தன்னிறைவை நோக்கிச் செல்லும் இந்தியாவின் அடையாளம் இது. இவ்வாறு அவர் கூறினார்.