சென்னை: காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் முதல் கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன.26-ம் தேதிகொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும்.
ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26-ம்தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஜன.20) காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
மேலும் வரும் 22, 24 ஆகிய 2 தினங்களும் இப்பகுதியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இத்தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலைமுதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.