திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேகம்பூர் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் (25) வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற போது, பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி பிடித்து போலீஸ் இடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் இன்று காலை ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். வங்கியில் மூன்று நபர்கள் பணி செய்து வந்த நிலையில் 3 வங்கி ஊழியர்களையும் பிளாஸ்டிக் டேக்யை வைத்து கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முயன்ற போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.
மேலும் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொள்ளையனை தீவிர விசாரணை செய்த போது, திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பதும் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மேலும் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நகர் மேற்கு காவல் நிலையம் நேரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இளைஞரிடம், இவருடன் சேர்ந்து வேறு யாரும் இந்த கொள்ளை முயற்சிக்கு உடந்தையாக உள்ளார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.