ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் பிப்ரவரி 3-ம் தேதி 12 மணிக்குப் பிறகு திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இங்கு நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். நேரடியாக மக்களைச் சந்திப்பதுதான் அதிகமாக இருக்கும்.
பிப்ரவரி 3-ம் தேதி பகல் 12 மணிக்குப் பிறகு, வேட்புமனுத்தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிப்ரவரி 1-ம் தேதி அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. திமுகவிற்கு வாக்களிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.” என்று கூறினார்.