கணவரையும், மாமியாரையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் ஒளித்து வைத்த பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நரேங்கி பகுதியைச் சேர்ந்த சங்கரி டே என்பவரின் மகன் அமர்ஜோதி டே-வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கலீடா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மாமியார் காணவில்லை என கலீடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே, தனது மாமியார் சங்கரி டே வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைத் தாய்மாமன் எடுத்துக் கொண்டதாக மற்றொரு புகார் அளித்தார்.
ஆனால் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கலீடாவிடம் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கலீடாவுக்கு தன்ஜீத் தேகா என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் அப்பெண்ணுக்கு அடிக்கடி சண்டை வந்தது.
இது பற்றி அறிந்து மாமியாரும், மருமகளைக் கண்டித்துள்ளார். இதனால், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்த கலீடா, அரூப் தாஸ் என்பவரின் உதவியுடன் முதலில் மாமியாரை கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார்.
நண்பர் தன்ஜீத் உதவியுடன் கணவரைக் கொன்று அவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிறகு இருவரது உடல் பாகங்களையும் பாலித்தீன் பையில் கட்டி கேமகாலயா அருகே சாலையோரம் வீசியதாக தெரிவித்தார்.
பிறகு போலீஸார் உடல் பாகங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து கலீடா, தன்கீத் தேகா, அரூப் தாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in