சென்னை முழுவதும் நம்பர் ப்ளேட் சோதனை; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை.!

சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் நேற்று தொடங்கினர். சோதனையின் போது, விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளை பொறுத்திய வாகனங்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, வாகன நம்பர் பிளேட்களில், கலை அல்லது படங்கள் மற்றும் ஆடம்பரமான எழுத்துக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பர் பிளேட் அளவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் விதிகளை மீறி தவறான நம்பர் பிளேட்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த மாதம் 2 நாட்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது. இச்சிறப்பு வாகன சோதனையின்படி, ஒவ்வொரு போக்குவரத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3 இடங்களை தேர்வு செய்து முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை கண்டறிய தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

இதையடுத்து ஒரு மாத காலம் வாகன ஓட்டிகளுக்கு நம்பர் பிளேட் சரி செய்வதற்காக போலீஸார் அவகாசம் வழங்கினர். சிலர் போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்று நம்பர் பிளேட்டை சரி செய்தனர். பலர் நம்பர் பிளேட்டை சரி செய்யாமல், தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸார் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை நடத்தினர். அந்தவகையில் சென்னை முழுவதும் மெரினா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், பெரிய வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் வாகனச் சோதனையை நடத்தினர். அப்போது, மோட்டார் வாகனச் சட்ட விதிகளின் படி நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

எட்டுக்குடியில் யோகி பாபு சாமி தரிசனம்!

அப்போது, வழக்கு தொடர்பான வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. தொடர்ந்து, அந்த வாகனங்களில் அபராதம் விதிக்கப்பட்டதற்கான ஸ்டிக்கரையும், அபராத ரசீதையும் போலீஸார் ஒட்டினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம், முறையான வாகன பதிவு எண்ணை சரி செய்து, பின்னர் அதற்குண்டான அபராதத்தைச் செலுத்திய பிறகு, அபராதம் செலுத்திய விவரங்கள் மற்றும் திருத்தப்பட்ட நம்பர் பிளேட் புகைப்படங்களை 7871845566 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும், [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப போலீஸார் அறிவுறுத்தினர்.

மேலும், நம்பர் பிளேட்டை சரி செய்யாமல் மீண்டும் இதே தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை 3 மடங்காக, அதாவது ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னையில் தொடர்ந்து வாகன நம்பர் பிளேட் சோதனை நடைபெறும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.